26/01/2023
ஜல்லிக்கட்டு எனும் தற்சர்பு பொருளாதார விழா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருச்சி மாவட்டத்தில் ஆவரங்காடு ஜல்லிக்கட்டு நூறு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. அது தொடர்பான ஒரு முகப்புத்தக பக்கத்தை பலவருடங்களாக நடத்தி வருகிறேன். குழு உறுப்பினர்கள் அவ்வப்போது என்னை அழைத்து அடுத்து எந்த ஊரில் மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்று கேட்பதுண்டு.
அப்படி அழைத்த மாடு வைத்திருக்கும் நபரொருவரிடம் "ஏன்னே அடிக்கடி கேட்கிறீங்களே ஒரு தடவ மாடு ஓட்டிட்டு வந்தா வண்டி & போக்கு வரத்துன்னு நிறைய செலவாகுமே? நஷ்டந்தானே ஆகும் எப்படி வொர்க் அவுட் ஆகுதுன்னு கேட்டேன். அதற்கு அவரளித்த பதிலே இந்த பதிவின் அடிப்படை.
அவரின் பதில்
"இல்லண்ணே ஒரு தடவ மாடு ஓட்டிட்டு வந்தோம்னா பூந்தி மிச்சர் இல்லன்னா பேன்ஸி பொருளுக்கான கடை போடுவோம். மாடு ஏத்திட்டு வர்ற அதே வண்டில பொருட்களும் நாங்களும் வந்துருவோம். ஜல்லிக்கட்டுக்கு சாமி கும்பிட வர்றவங்ககிட்ட இரண்டு நாளைக்கு வியாபாரம் இருக்கும். மாடு ஜெயிச்சா மாட்டுக்கும் பரிசு கிடைக்கும். ஜெயிக்கிற மாட்டை நல்ல விலைக்கும் விக்கலாம். நாங்க சில நேரம் மாடும் பிடிக்கிறோம். அதுல கிடைக்கிற பொருளும் லாபந்தானனேன்னுனார்" பாருங்க நான் அதிர்ந்து போய்விட்டேன்.
இன்னும் கொஞ்சம் அதைப்பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டப்ப இந்த ஜல்லிக்கட்டிலுள்ள ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு பொதுவாக எட்டுபட்டி மக்கள் எளிதாக கூடக்கூடிய சந்திப்புகளிலேயே நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களை ஒட்டி கோயில்கள் கண்டிப்பாக இருக்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு வரும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும், ரசிகர்களும் கோயிலுக்கு செல்லாமல் திரும்புவதில்லை.
கோவிலுக்கருகிலேயே உள்ளே செல்லும் போது பூஜை சாமான், மாலை, பூ போன்ற பொருட்களுக்கான கடைகள் வெளியில் வரும்போது பூந்தி மிச்சர் போன்ற உணவு கடைகள், ப்ளாஸ்டிக் & விளையாட்டு பொருட்களுக்கான கடைகள், ஜோசியம் பார்ப்பவர், சூதாட்டக்கடை, ஐஸ்,தண்ணீர்,ஜீஸ் கடைகள், மாட்டுக்கான அலங்கார பொருட்கள் கடைகள், அதே இடத்தில் ஆட்டு, மாட்டு,கோழி சந்தைகள், அந்த இடத்திற்கான போக்குவரத்து வாகனங்கள்,வாடகைகள்,டிக்கெட்டுகள், பெட்ரோல்,டீசல் விற்பனை, சில இடங்களில் வசூலிக்கப்படும் ஜல்லிக்கட்டு பார்வையாளர் கட்டணம், அதில் கிடைக்கும் பரிசுகள், ஜல்லிக்கட்டு மேடை அமைப்பு, பேரிகேட் அமைப்பு, ஓடுதளத்திற்கான் தேங்காய்நார், மாடுபிடி வீரர்களுக்கான டீசர்ட், அவர்களுக்கு அளிக்கப்படும் டோக்கன் பிரிண்டிங்க், பேனர் விளம்பரங்கள்,மீடியா கவரேஜ் & ஒளிபரப்பு அதில் கிடைக்கும் விளம்பர வருமானம், மாடு & மாடுபிடி வீரர்களக்கான பரிசோதனை மற்றும் மருந்துகள், மாடு & மாடு பிடி வீர்ரகளுக்கான காப்பீடு,போலீஸ் பந்தோபஸ்து, அவர்களுக்கான அனைத்து வசதிகள், தற்காலிக வாடகை டாய்லெட்டுகள், களத்தை தயார் செய்யும் ஜேசிபி எந்திரங்கள் & அதற்கான பணியாளர்கள், லைட் சவுண்ட் சிஸ்ட்ம், டெக்கரேசன் குழு, ஜல்லிக்கட்டை ஒட்டி நடக்கும் தெருக்கூத்து,கரகாட்டம்,ஆடல்பாடல்,சினிமா ஒளிப்பரப்புகள், இலவச தண்ணீர் & மோர் பந்தல், அண்ணதானங்கள்,உண்டியல் & காணிக்கைகள் இத்யாதி இத்யாதி என்று அடிக்கிக்கொண்டே போகுமளவிற்க்கு ஒரு மாபெரும் தற்சார்பு பொருளாதாரம் இருக்கிறதன்பதை புரிந்து கொண்டேன்.
5000 நபர்கள் கூடுமிடத்தில் தலைக்கு 500ரூபாய் செலவு செய்யும் பட்சத்தில் அந்த இடத்தில் நடக்கும் மொத்த சந்தை வியாபாரம் குறைந்தபட்சம் 25லட்சம் என்றால் அவரவர் ஊரில் நடக்கும் மஞ்சுவிரட்டு & ஜல்லிக்கட்டில் எவ்வளவு விற்பனை நடக்கும் என்று நீங்களே கணக்கிட்டுப்பார்க்க வேண்டும்.
இவையாவும் ஒரு நாள் கணக்கு மட்டுமே. ஜனவரி 15 தொடங்கி ஜீன் மாத கடைசி வரைக்கும் கிட்ட தட்ட 150 நாட்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இது போன்ற விழாக்கள் நடந்து வருகின்றன.
இந்த விழாக்களில் விற்பனையாகும் பீடி,சிகரெட் மற்றும் மதுபானம் விற்பனை கணக்கை சேர்த்தால் எவ்வளவு வரும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
இந்த விழக்களில் முடிவாகும் காதல் & கல்யாண பொருள் வியாபாரம் தனிக்கணக்கு.
150 நாட்களில் குறைந்த பட்சம் 50 கோடி அதிகபட்சமாக 1000 கோடி வரை வியாபாரம்
நடக்க வாய்ப்புள்ளது.
தமிழக ஜிடிபி 24.85 லட்சம் கோடியில்
ஜல்லிக்கட்டும் ஒரு சிறிய பங்கு வகுக்கிறதென்பது யாராலும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் பெரும்பாலும் ஆற்றங்கரை மாவட்டங்களான மதுரை,
திருச்சி,புதுக்கோட்டை,தஞ்சை,சிவகங்கையில் விளைச்சல் முடிந்து கிடைத்த வருவாயில் இந்த கொண்டாட்டங்கள் நடத்தி விவசாயிகள் இந்த தற்சார்பு பொருளாதாரத்தை முன்னொரு காலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். அது இன்றும் பலபேரை வாழ வைக்கிறது.
ஜல்லிக்கட்டும், வடமாடும், மஞ்சுவிரட்டும், வடமாவட்டங்களில் கொண்டாடப்படும் எருது விடும் விழாவும், மாட்டு வண்டி பந்தயங்களும்,சேவல் சண்டையும் வெறும் விழாக்களல்ல அவை நமக்கு நாமே வாழ வளர வழிவகுக்கும் ஒரு "தற்சார்பு சந்தை பொருளாதாரமே"
அடுத்த முறை நீங்கள் இந்ந விழாக்களில் கலந்து கொள்ள நேரிட்டால் அங்கிருக்கும் சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்குங்கள்.. நீங்களும் நேரடியாக இந்த தற்சார்பு பொருளாதாரத்தில் பங்கு கொள்ளுங்கள்!
"ஏறு தழுவல்" எனும் வீரமரபு ஒரு தற்சார்பு பொருளாதார விழா....
ஜெய்சன் பிரதீஷ்
ஒசூர்
26.01.23