28/12/2024
பாவியென்றன் விதியைநொந்து பாழுமுள்ளம் துடிக்கிறதே
தாவிவரும் நினைவலைகள் தத்தளிக்க வைத்திடுதே
தீவினையோ வல்வினையோ தீராத சோகமிதே !
கல்தூணாய் நீயிருந்தாய் கவலையின்றி மகிழ்ந்திருந்தோம்
இல்லாமற் போனாயே இனியென்ன செய்திடுவோம்
பல்லக்கில் அனுப்பிவிட்டுப் பரிதவித்துக் கிடக்கின்றோம்
சொல்லியழ வார்த்தையின்றித் துயர்நெஞ்சை அடைத்திடுதே !
முட்டிமுட்டி அழுதாலும் முன்னேநீ வரவில்லை
எட்டியுனைப் பிடித்திழுக்க இருக்குமிடம் தெரியவில்லை !
ஊற்றெடுக்கும் உன்நினைவு உள்ளத்தை அரித்திடுதே
ஆற்றவொணாத் துயராலே அன்றாடம் துடிக்கிறதே
காற்றினிலே மிதந்துவந்து கண்ணீரைத் துடைத்திடுவாய்
கூற்றுவனை இறைஞ்சிடுவேன் கூப்பிடவே சடுதியிலே !🙏🙏🙏