07/04/2022
குழந்தைகளின் திருவிழா!
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, மறந்திருந்த எண்ணையும், எழுத்தையும் கற்கிறார்கள். வாசிப்பின் வாசனையை மீண்டும் நுகர ஆரம்பித்திருக்கிறார்கள். எங்களது தந்தை பெரியார் இலவச பாடசாலையின் இளம் குருத்துக்கள். பாடசாலை ஆரம்பித்த 50 நாட்களிலேயே அழகான மாற்றத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருகிறார்கள். ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டுத்தனம் இருந்தாலும், சொல்வதை படித்து விடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எங்கள் மாணவர்கள். 13 பேருடன் தொடங்கிய பாடசாலை இன்று அறுபதை தாண்டியிருக்கிறது.
அவர்களின் ஆர்வத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது 50வது தினக் கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா. மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் “கதை சொல்லும் போட்டியை” அறிவித்தோம்.
40 பேரில் 30 மாணவர்கள் ஆர்வத்துடன் கதைகளை வாங்கிச் சென்றனர். ஒவ்வொரு நாளும் ”நான், நீ” என கதை சொல்வதில் போட்டாபோட்டி நடக்கும். போட்டியில் கலந்து கொள்ளாமல் தயங்கி நின்ற மாணவர்களும்கூட பின்னர், உற்சாகத்துடன் பங்கெடுத்தனர்.
இரண்டாவது வாய்ப்புக் கேட்டு ஆசிரியர்களை நச்சரித்தனர் சில குழந்தைகள். எல்லோருக்கும் முன்பாக கதை சொல்ல பயந்த மாணவர்கள் ஆசிரியரிடம் தனிமையில் மிகச் சிறப்பாக கதை சொன்னார்கள்.
எல்லோரும் சொன்னது மட்டுமல்ல, பிறர் சொல்லும்போது அதை ஆர்வத்துடன் அமைதியாக கவனித்தனர். இதுவே ஆச்சரியமாக இருந்தது. சில நிமிடம்கூட உட்கார பொறுமையற்ற மாணவர்களா இவர்கள் என்று. கதைகள், மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. இதை முதல் வெற்றியாகக் கருதினோம். வாசிப்பைத் தொடர் பழக்கமாக்க பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்க திட்டமிட்டோம். சிறிய அளவில் நிகழ்ச்சி நடத்தலாம் என நினைத்தோம்.
நிகழ்ச்சியை அறிவித்ததுதான் பாக்கி. எங்கள் மாணவர்களே நிகழ்ச்சிக்கான திட்டங்களை வகுத்துவிட்டார்கள். யாரும் அவர்களுக்கு வழிகாட்டவில்லை.
நடனத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் மூன்று குழுக்களாக குழு நடனம் ஆடினர். குழுவை உருவாக்கியதும் அவர்களே. பாடலை தேர்வு செய்ததும் அவர்களே. நடனத்தை வடிவமைத்ததும் அவர்களே. பயிற்சி செய்ததும் அவர்களே. இதில் என்னவோர் ஆச்சரியம் என்றால், எவ்வித சிறு புகாரும் இல்லை. எவ்வளவு ஒற்றுமையாக திட்டமிட்டு செயலாற்றியிருக்கிறார்கள் என இன்னும்கூட வியப்பாக இருக்கிறது.
அதேபோல், தந்தை பெரியார் பற்றிய பேச்சு, பாட்டு, கானா என ஒவ்வொருவரும் தனது விருப்பத்தின் & திறமையின் அடிப்படையில் தயாராகி வந்தனர். அதையே நிகழ்ச்சி நிரலாக்கினர். தங்களது பெற்றோர்களையும் அழைத்து வந்து சிறிய விழாவை பிரம்மாண்டமாக்கினர்.
சரி, எல்லாவற்றையும் நமது பிள்ளைகள் முடித்துவிட்டார்கள், நிகழ்ச்சியை மட்டும் நடத்திக் கொடுக்கலாம் என ஆசிரியர்கள் நினைத்தோம். ஆனால், அதைக்கூட எங்கள் பாடசாலை மாணவர்கள் விட்டுவைக்கவில்லை. பத்தாம் வகுப்பு மாணவி பிரியாவே மிக அழகாக, அவருக்கே உரிய பாணியில் கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சயம் அது நற்பொழுதாக இருந்திருக்கும். எங்கள் மாணவர்களால் மனச்சுமை நீங்கி இலகுவாகியிருப்பார்கள். அந்த இரண்டரை மணி நேரமும் உற்சாகக்குரல்களாலும், மகிழ்ச்சி வெள்ளத்தாலும் அரங்கமே நிறைந்திருந்து.
கூடவே எங்களுக்கு பாடமும் கற்பித்தனர் எங்கள் மாணவர்கள். ”நீங்கள் நினைப்பது தவறு, இது எங்களுடைய பாடசாலை; நாங்கள்தான் இதை நடத்துகிறோம்” என்று மாணவர்கள் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்கள். ”நாங்க தான் இங்க” ன்னு உரக்கக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
அவர்களைக் கூடுதலாகப் புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் இது. நாம் ஒரு அடி கீழிறங்கினால், அவர்கள் பல அடிகள் மேலெழும்பி வருவார்கள் என்பதற்கு எங்களது பாடசாலை மாணவர்கள் உதாரணமாயிருக்கிறார்கள். இந்த உற்சாகத்தோடு இன்னும் பல மடங்கு அடிகளை விரைவாகக் கடப்பார்கள் என்பது உறுதி!
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பேரன்பும், பெரும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.
மேலும், சில தினங்களுக்கு முன்னதாக கூப்பிட்டும் எவ்வித அலட்டலும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் திரு.பிரின்ஸ் என்.ஆர்.எஸ் பெரியார் அவர்களுக்கும்,
தாம்பரம் பகுதி திராவிடர் கழகத் தலைவர் திரு.மோகன்ராஜ் அவர்களுக்கும்,
ஆவடி பகுதிகளைச் சேர்ந்த திராவிடர் கழகத் துணைச்செயலாளர் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கும்,
பிள்ளைகளுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கி அன்பளிப்பாகத் தந்துதவிய ஆடிட்டர் திரு.கார்த்திக்கேயன் அவர்களுக்கும்,
தனது உழைப்பால் விளைந்த இடத்தை பாடசாலைக்காக இலவசமாக வழங்கியிருக்கும் ஐயா திரு.கமலக்கண்ணன் அவர்களுக்கும்,
எங்கள் மாணவர்களின் அருமைப் பெற்றோர்களுக்கும்
இதயம் கனிந்த நன்றிகள்!
இவன்,
ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு,
தந்தை பெரியார் இலவச பாடசாலை.