22/12/2020
தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் திரு. அப்துல் ஜப்பார் இன்று காலமானார்.
அப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்
தொலைக்காட்சி வருவதற்கு முன்னர் பெரும்பாலும் வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களது ஆட்டம் பற்றிய அறிவுக்காகவும், குரல் வளத்துக்காகவுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வானொலியில் கிரிக்கெட் வர்ணனை தருபவர்கள் இருவகைப்படுவர். ஒருவர் ஆட்ட வர்ணனையாளர். மற்றவர் வர்ணனைக்கு வளம் சேர்க்கும் நிபுணர். இருவரும் ஒருசேர அமர்ந்திருந்து தங்களுக்குள்ளாக ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருப்பர். இடையிடையே பந்துகள் வீசப்படும்போது வர்ணனையாளர் பந்தை விவரிப்பார். மட்டையடியை விவரிப்பார். பந்து தடுக்கப்படுவதை விவரிப்பார். அப்பொழுது நிபுணர் வாய்பொத்தி அமைதியாக இருப்பார். பந்தின், அடியின், தடுத்தலின் விவரம் முடிந்தவுடன் வர்ணனையாளர் நிபுணரைப் பேச்சுக்கு இழுப்பார். அந்தப் பந்தில் உருப்படியாக ஏதாவது நடந்திருந்தால் கேள்வி அதுபற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் தொடரும்.
இந்த உரையாடல் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். கிரிக்கெட் பற்றி இருக்கவேண்டுமென்று கூடக் கிடையாது. பிபிசி கிரிக்கெட் வர்ணனையில் ஹென்றி புளோஃபெல்ட் கேக் சாப்பிடுவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து, கூட்டத்தில் இருப்பவர்களின் காதுத் தோடுகள் வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார். நிபுணர் ஒரு தேர்ச்சிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்/கோச் என்றால் பேச்சு பெரும்பாலும் அவர்களைப் பற்றியதாக இருக்கும். நிபுணரின் வாயைத் தோண்டித் துருவி சுவையான விஷயங்களை வெளிக்கொணர்பவரே சிறந்த வர்ணனையாளர்.
தொலைக்காட்சி வந்ததும் கிரிக்கெட் வர்ணனை முற்றிலுமாக அழிந்துபோனது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து தொலைக்காட்சி வர்ணனை நடந்தது. படங்களே எல்லாவற்றையும் விவரிப்பதால், தொலைக்காட்சி வர்ணனையாளர் எப்பொழுதாவது ஓரிரு வார்த்தைகள் சொன்னால் போதும் என்றானது.
இன்றும்கூட BBC Test Match Special வானொலி வர்ணனை மிகவும் பிரசித்தி பெற்றது. (ஆனால் முன்போல் இல்லாது சற்றே தரத்தில் குறைந்துள்ளது. நிறைய செய்தித்தாள் நிருபர்களை வைத்து ஒப்பேற்றப் பார்க்கிறார்கள். நான்கு பேர்கள் போதும். ஆனால் அதை விடுத்து தேவையின்றி கூட்டம் சேர்க்கிறார்கள்.)
இந்திய வானொலி தரத்துக்குப் பேர் போனதல்ல. ஆங்கில/ஹிந்தி கிரிக்கெட் வர்ணனை மிகச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியாது.
ஆனால் சென்னை கிரிக்கெட் ஆட்டத்துக்காக சென்னை வானொலி தயாரிக்கும் தமிழ் கிரிக்கெட் வர்ணனை நல்ல தரம் வாய்ந்ததாகவே இருந்தது. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, கூத்தபிரான் போன்றோர் தமது வர்ணனையில் கணீரென்ற குரலையும், நல்ல கிரிக்கெட் அறிவையும், அதற்கு மேல் தீவிர ஆர்வத்தையும் கொண்டுவந்தனர். இவர்கள் அனைவருமே கிரிக்கெட் நிபுணர்கள் என்ற பிரிவில் வரமாட்டார்கள். வர்ணனையாளர்கள் என்ற பிரிவில் வருவார்கள். ஆனால் ஒருவர் வர்ணனை செய்யும்போது அடுத்தவர் நிபுணர் இருக்கையில் அமர்ந்திருப்பார். (பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய தமிழர்களுக்கு உருப்படியாகத் தமிழில் பேசவராது என்பதனால் சரியான கிரிக்கெட் நிபுணர் யாருமே தமிழ் வர்ணனைக்குக் கிடைத்ததில்லை.)
அப்துல் ஜப்பார் 'வாலாஜா சாலை முனையிலிருந்து பந்துவீச்சாளர் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறார்' எனும்போது கண்ணில் அந்தக் காட்சி தெரியும். 'அளவு சற்றுக் குறைவாக விழுந்த பந்து' எனும்போது பந்து ஆடுகளத்தின் நடுவில் குத்தி நம் கண் முன்னே எழுந்து வரும். 'பின்காலில் சென்று வெட்டி ஆடுகிறார்' எனும்போது கைகள் தானாக 'cut' செய்யும். 'கவர் திசைக்கும், பாயிண்ட் திசைக்கும் இடையே பந்து பறந்து செல்கிறது' ... பந்து செல்லும். 'பந்துத் தடுப்பாளர் பாய்ந்து தடுக்கிறார்' ... தடுப்பார். 'வேகமாக ஓடிச்சென்று இரண்டு ஓட்டங்களைப் பெறுகிறார்கள்'... 'அணியின் எண்ணிக்கை 63ஆக உயர்கிறது' ... 'அடுத்த பந்து...'
கிரிக்கெட் போன்ற ஓர் ஆட்டத்தில் நுட்பமான பல விஷயங்கள் உண்டு. பிற ஆட்டங்களிலும் உண்டு. பொதுமக்களுக்கு நுண்ணிய விஷயங்கள் தெரிந்திருக்காது. அளவு குறைந்து வரும் பந்தை ஏன் பின்னங்காலில் சென்று ஆட வேண்டும்? முன்னங்காலில் வந்து ஆடினால்? வர்ணனையாளர் உதவியில்லையென்றால் பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியாது.
அப்துல் ஜப்பார் குறித்து 2005-ம் ஆண்டு பத்ரி சேஷாத்ரி எழுதிய பதிவு இது.