31/05/2023
பிறந்த மண்ணுக்குச் செல்வது அத்தனை எளிதல்ல
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை உருவாக்கி ஒரு நூற்றாண்டு காலமாய் அங்கேயே பிறந்து வளர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தக்காடே தங்கள் வீடு. அந்த வனத்தின் பாதுகாவலர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால் அவர்களை தங்கள் பணியில் உடன் பயணிப்பவர்களாக பாவிக்காமல் தொடர்ந்து எதிரிகளாகவே நடத்திவருகிறது வனத்துறை.
கடந்த வெள்ளிக்கிழமை (26.05.2023) ஊத்து எஸ்டேட்டுக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மணிமுத்தாறு வன சோதனைச்சாவடியில் வழக்கம்போல சோதனைக்காக நிறுத்தப்பட்டது. எஸ்டேட் வாசிகள் அல்லாத புதிய முகங்கள் தென்படவே சுமார் 2௦க்கும் அதிகமான பயணிகளை பேருந்திலிருந்து கீழே இறக்கியது வனத்துறை. இதனால் பயணிகளுக்கும் வனத்துறைக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சுமார் 2 மணிநேரம் கழித்து பயணிகள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ஊடகங்களில் இச்செய்தி பரவலாக பதிவானது.
எஸ்டேட் பேருந்தில் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு, மற்றவர்கள் எல்லோரும் தனியார் வாகனங்களிலோ அல்லது வனத்துறை இயக்கும் வேன்களிலோ மட்டுமே செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது வனத்துறை. இது சமீப காலமாக மட்டும் நடந்தேறிவரும் நிகழ்வு.
அரசுப்பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று எவரும் எவரையும் தடை செய்யமுடியாது. மாஞ்சோலை பகுதி சுற்றுலா செல்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியும் அல்ல. அப்படியிருந்தால் தனியார் வாகனங்களில் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கிடாது வனத்துறை.
இதர பகுதிகளைப்போல தனியார் வாகனங்களில் நினைத்தநேரத்தில் யாரும் எஸ்டேட்டுக்குச் செல்லமுடியாது. வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும். நுழைவுக்கட்டணமாக வாகனத்திற்கு ரூ.50/-ம், பயணிகளுக்கு தலா 30/-ம் போக, கடந்த மூன்று ஆண்டுகளாக, Conservation Fee என்று ரூ.60/-ம், Eco Tourism என்ற பெயரில் கூடுதலாக ரூ.950/-ம் வனத்துறை வசூலித்து வருகிறது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே எஸ்டேட்டுக்கு இப்போது காரில் செல்லமுடியும் என்ற நிலை. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, காரில் பயணம் செய்வதென்றால் எஸ்டேட் வாசிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். தமிழ்நாட்டில் மாஞ்சோலை பகுதி அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் இதர பகுதிகள் உள்ளிட்ட வேறு எந்த வனப்பகுதியிலும் இதுபோல கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
வண்ணபூர்ணி என்ற சங்கத்தின் (Society) மூலமாக மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியிலிருந்து வனத்துறை இயக்கும் வேன்கள், மாஞ்சோலைக்கு அடுத்துள்ள காக்காச்சி பகுதிவரை மட்டுமே செல்லும். அதில் பயணிக்க கட்டணம் ஒருவருக்கு ரூ.350/-. தனியார் வாகனங்களுக்கு, கூடுதல் கட்டணமாக ரூ.1110/- அல்லது தாங்கள் இயக்கும் வேன்களில் ரூ.350/- வசூலிக்கவேண்டும் என்பதற்காகவே அரசுப்பேருந்தில் சாதாரண மக்கள் பயணிப்பதை சட்டப்புறம்பாக தடுத்து வருகிறது வனத்துறை.
வனத்துறை கடந்த காலங்களிலும் எஸ்டேட்டில் பல்வேறு அத்துமீறல்களை நிகழ்த்தியுள்ளது. துவக்ககாலத்தில் வனத்துறைக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தது கம்பெனி. அவைகளைக் கொஞ்சம்கொஞ்சமாக குறைத்துக்கொள்ள ஆரம்பித்ததும் வனத்துறைக்கும் கம்பெனிக்கும் இடையே பனிப்போர் மூண்டது. 1980க்குப் பிறகு வெளிப்படையாக பெரிய அளவில் மோதல் ஏற்படத்துவங்கியது.
மணிமுத்தாறு அருவிக்கு மேலே சுமார் மூன்று கிலோமீட்டர் வரையிலும் தான் சாலை அமைத்துள்ளது அரசு. "புது ரோடு" என சொல்லப்படும் அந்த இடத்திலிருந்து வலதுபக்கம் லாரி செல்லும் அளவுக்கு பாதை உள்ளது. அடுக்குப்பாறைக்குச் செல்லும் அந்த இடத்தில் இருபக்கத்திலும் கம்பி ஊன்றி நடுவே சங்கிலியால் ஆன தடுப்பினை கம்பெனி நட்டது. கம்பெனி வைத்திருந்த அந்த தடுப்பினை 1990ல் வனத்துறை பிடுங்கிப்போட்டது.
தகவல் அறிந்ததும் அதனைத்தடுக்க வேண்டி அப்போதைய எஸ்டேட் குரூப் மேனேஜர் ஜோதிகுமாரும், மாஞ்சோலை மேலாளர் மந்தன்னா-வும் தொழிலாளர்களுடன் கிளம்பினார்கள். மாஞ்சோலையில் லாரி ஓட்டுனராக பணியாற்றிய அலெக்ஸாண்டர் தலைமையில் ஒரு குழுவினை ஜீப்பில் அப்பகுதிக்கு அனுப்பியது கம்பெனி. அங்கிருந்த வனத்துறையினர், உதவிக்கு அழைத்து வந்திருந்த சிங்கப்பட்டி ஆட்கள் உள்ளிட்ட அனைவரையும் எஸ்டேட் குழு விரட்டியது. அதனால் எஸ்டேட் மேலாளர் மந்தன்னாவை கைதுசெய்ய வனத்துறை முயன்றது. அதனைத் தெரிந்துகொண்ட அவர், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொண்டார். அதற்காக தொடரப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகள் கழித்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து அச்சாலை தனது கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிக்காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதலாம் நாள் அந்த சாலையை கம்பெனி அடைத்துவிடும். அரசுப்பேருந்து, வனத்துறையை தவிர தனியார் வாகனங்கள் எதுவும் அந்த நாளில் எஸ்டேட்டுக்கு வரமுடியாது.
10.10.1990ல் எஸ்டேட் பகுதிகளுக்குள் செல்ல 86 வாகனங்களுக்கு அனுமதி கோரியது கம்பெனி. எந்த நேரத்திலும் எவ்வித காரணமும் சொல்லாமல் அனுமதியை இரத்து செய்யலாம் என்பது உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளுடன் 24 வாகனங்களுக்கு அறுபது நாட்களுக்கு மட்டும் 07.02.1991 அன்று அனுமதி கொடுத்தது வனத்துறை. அறுபது நாளுக்கு ஒருமுறை அனுமதியை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.
1974இல் நடைமுறைக்கு வந்த வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் மற்றும் 1976 ஆம் உருவாக்கப்பட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் ஆகியவைகளை காரணம் காட்டி, 17 ஆண்டுகள் கழித்து 04.01.1991 அன்று, எஸ்டேட் சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்களை இயக்கக்கூடாது என்று கம்பெனிக்கு உத்தரவிட்டது வனத்துறை. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் 3௦ கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்பாசமுத்திரம் சென்று வன அதிகாரியிடம் முன்னனுமதி பெற்றபிறகே அக்காலகட்டத்தில் இரவில் வாகனத்தை இயக்கமுடிந்தது.
புது ரோட்டுக்கு மேலிருந்து எஸ்டேட் பகுதி முழுமையும் கம்பெனிதான் சாலை அமைத்து பராமரித்தும் வருகிறது. அதனால் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து, கட்டண விபர பலகையை சாலை ஓரத்தில் வைத்தது கம்பெனி. அதனை 17.01.1995ல் பிடுங்கிப்போட்டது வனத்துறை. அது குறித்து கம்பெனி கேள்வி கேட்டதால் தேயிலைத் தொழிற்சாலையில் அடுப்பு எரிப்பதற்காக வெட்டப்பட்ட சார் கட்டைகளை (நாலடி நீளத்திற்கு வெட்டப்பட்டிருக்கும் மரக்கட்டை), சட்டத்துக்குப் புறம்பாக காட்டு மரங்களை வெட்டியதாகச் சொல்லி, 14.03.1995 மற்றும் 15.03.1995 அன்று வனத்துறை கைப்பற்றிச்சென்றது. வனத்துறையின் தொடர் அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ச்சியாய் நீதிமன்றத்தை நாடியது கம்பெனி.
அந்த சமயத்தில் நாலுமுக்கு எஸ்டேட்டில் இருக்கும் உணவகத்தில் (Canteen) வனத்துறையினர் சாப்பிட்டுவிட்டு, வாழைப்பழத்தையும் பறித்துக்கொண்டு, அதற்கு காசுகொடுக்க மறுத்தார்கள். கேட்டதற்கு, இந்த காடே எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எங்கள் தயவில்தான் கம்பெனியே இங்கு நடந்துகொண்டு இருக்கிறது என்று பதில் சொன்னார்கள். தொழிலாளர்கள் ஒன்றுகூடி கேள்வி எழுப்பினார்கள். விளைவு - வீட்டில் அடுப்பு எரிக்க, கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த மரங்களின் சுள்ளிகளை எடுத்துவரும் தொழிலாளர்களை அடித்து அவர்களிடமிருக்கும் கத்தியைப்பிடுங்கிக் கொண்டதுடன், கடுமையாக அபராதம் விதிக்கவும் ஆரம்பித்தார்கள். பல நேரங்களில், அபராதத்தொகையானது தொழிலாளர்களின் ஒரு மாத சமபளத்தை விடவும் அதிகம். சில வேளைகளில் தொழிலாளர்களை கைதுசெய்து கீழே கொண்டுசென்றார்கள்.
தொடர்ச்சியாக தொழிலாளர்களின் வீடுகளுக்குள் ஏறிவந்து, மரப்பலகைகள் இருக்கிறதா என்று சோதனைசெய்து வீட்டிலிருந்த கம்பு, குச்சி, விறகு, கத்தி, கோடாரி, வாள் போன்றவைகளை எடுத்துச்சென்றார்கள். இதனால் தொழிலாளர்கள் பயந்து நடுங்க ஆரம்பித்தார்கள். "பொட்டுக்காரன்" எனும், நெற்றியில் பொட்டு வைத்திருந்த வன அதிகாரியின் அத்துமீறல்களுக்குப் பயந்து காட்டுக்குள் போகவே அச்சப்பட்டார்கள் மக்கள்.
தொடர் நெருக்கடியின் விளைவாக, கம்பெனிக்கு தேயிலைத் தொழிற்சாலையில் அடுப்பு எரிக்க காட்டிலிருந்து விறகு எடுக்கமுடியாமல் போனது. இதன் காரணமாக கல்லிடை, அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விறகை விலைக்கு வாங்கி லாரிகளில் எஸ்டேட்டுக்கு கொண்டுவந்தது கம்பெனி. சுமார் 2 ஆண்டுகள் இதே நிலைதான் நீடித்தது. பின்னர் அரசிடம் அனுமதி வாங்கி கம்பெனியே நட்டு வளர்த்த யூகலிப்டஸ் மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். வனத்துறையினரை சமாளிக்க பாதுகாப்பு கருதி ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரிகளை நியமித்துக்கொண்டது கம்பெனி.
எஸ்டேட்டிலிருந்து கணக்குமுடித்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்கள் வீட்டுப்பொருட்களை கீழே கொண்டுவர லாரிக்கு அனுமதி வழங்க தாமதப்படுத்துவதும், பொருட்களுடன் மலையிலிருந்து வரும்போது சோதனை என்ற பெயரில் லாரியை வெகுநேரம் காக்க வைப்பது, அதிலிருக்கும் சின்னச்சின்ன கம்புகளையும் பிடுங்கிக்கொள்வது, என பல்வேறு வழிகளில் இடையூறு வழங்குவது வனத்துறையின் வாடிக்கை.
கொரோனா காலத்தில் உலக நாடுகளெல்லாம் வீட்டுக்குள் முடங்கியது. அந்த தருணத்தில் இணையம் வாயிலாக கல்வி கற்க ஆரம்பித்தார்கள் மாணாக்கர்கள். எஸ்டேட் பகுதியில் 2G இணைப்பு தான் உள்ளது. அதன் மூலம் இணைப்பு பெற போதிய வேகம் இல்லாததால் எஸ்டேட் பகுதி குழந்தைகளின் படிப்பு வெகுவாக பாதிக்கப்பட்டது. அதற்காக நீதிமன்றத்தை அணுகியது உள்ளிட்ட எவ்வளவோ சட்டப்பூர்வ வழிகளில் முயன்ற போதிலும் வனத்துறையினரின் தொடர் அனுமதி மறுப்பின் காரணமாக இன்றளவும் 3G இணைப்பு எஸ்டேட் பகுதியில் நடப்புக்கு வரவில்லை.
கம்பெனிக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகளால் எதார்த்தத்தில் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது தொழிலாளர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் தான் என்பதை வனத்துறை ஒருபோதும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
எஸ்டேட் தொழிலாளர்களின் குடும்பங்கள், அவர்களின் உறவினர்கள் கொடை, திருவிழா, சடங்கு, கல்யாணம், இறப்பு நிகழ்வுகளின் போது எஸ்டேட் பகுதிக்குச் சென்று தங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. தனியார் வாகனங்களில் செல்வதற்கும் எளிதில் அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கினாலும் இரண்டு நாட்களுக்கு மேல் எஸ்டேட்டில் தனியார் வாகனத்துடன் தங்கியிருக்க ஒருபோதும் அனுமதியில்லை. எஸ்டேட்டில் முன்பு வசித்த மக்கள் தற்போது அரசுப்பேருந்தில் எஸ்டேட்டுக்குச் செல்ல நேர்கையில் எஸ்டேட் முகவரி கொண்ட ஆதார் அட்டையைக் காட்டிய பிறகே வனத்துறையால் அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறையின் கெடுபிடிகளால் பிறந்த மண்ணுக்குச் சென்று வருவதே பெரும் போராட்டமாகிப் போனது மாஞ்சோலை மக்களுக்கு.
எழுத்து:இ.இராபர்ட்சந்திரக்குமார்.