19/02/2021
சந்தையில் சம்பாதிக்கிறது எவ்வளவு முக்கியமோ அதைப்போன்றே சந்தையின் நஷ்டத்தை தாங்கும் திடமான மனதை கொண்டிருப்பதும் மிக மிக முக்கியமானது..... அதனால இதைப்படிங்க முதல்ல....
பங்கு சந்தைகளிலும், கமாடிட்டி சந்தைகளிலும் பெருத்த நஷ்டத்தை சந்தித்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பவர்களுக்கான சில எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள்.....
சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்திருப்பதால் இதுவே முதலீட்டுக்கு சரியான தருணம்..... எனவே கூடுதலாக முதலீடு செய்யுங்கள் என்று பங்கு தரகு நிறுவனம் நாளை முதல் உங்களிடம் தூண்டிலை போட துவங்குவார்கள்......
ஆனால் உடனடியாக பெரும் தொகையை முதலீடு செய்யாதீர்கள்.
இழந்த பணத்தை உடனடியாக மீட்டே தீரணும்னு மனதில் ஒரு வெறி வந்து வந்து போகும்.... ஆனால் உங்கள் அவசரத்துக்கு சந்தைகள் வரவே வராது. அதனால் நிதானமாக வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்து தகுந்த நேரத்தில் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.
சர்வதேச அளவில் பீதியை கிளப்பியுள்ள கொரோனா வைரஸ் விவகாரம் அடங்கும் வரை காத்திருங்கள்....
இன்றைக்கு விழுந்த அடியிலிருந்து நாளை மறுநாள் சந்தைகள் மீள்வது போல தோன்றினாலும் அந்த மீட்சி ஸ்திரமானதாக இருப்பது அவசியம். குறிப்பாக சந்தையில் Trading Volume குறைவாக இருந்தால் பொத்திக்கொண்டு சும்மா இருங்கள்.
எந்தவித தொழில் நுட்ப பகுப்பாய்வு முறையும் (Technical Analysis) இதுபோன்ற சந்தைகளில் எடுபடாது.
மிக மிக முக்கியமாக எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் நிதானமாக இருங்கள். உங்கள் மனதில் இருக்கும் வெறுமை, குற்ற உணர்வு, நீங்களே உணரும் கையாலாகாதத்தனம் இவற்றின் காரணமாக ஏற்படும் கோபத்தை எந்த சூழலிலும் உங்கள் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தாதீர்கள். குறிப்பாக உங்கள் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளிடம் வெளிப்படுத்தாதீர்கள். எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் மனச்சுமை இருந்தாலும் நெருங்கிய நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம் விட்டு பேசி மன அழுத்தத்தை குறைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் இளைஞர்களாக இருப்பின் இங்கே இழந்த பணத்தை விட பல மடங்கு பணத்தை வேறு நல்ல பல வேலைகளில், தொழில்களில் எதிர்காலத்தில் சம்பாதிக்க இயலும் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் நிறுத்தி செயல்படுங்கள்...
வேறு எந்த விபரீத முடிவுகளையும் எடுக்க முயலாதீர்கள்....